நாமக்கல் ஒன்றியம்

அரசாணை 2(டி)எண்.32 கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள (பா.உ.2)த்துறை நாள்.03.10.2018 ன் படி, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 12.12.2018 அன்று பதிவு செய்யப்பட்டு 17.12.2018 முதல் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் ஒன்றியத்தில் 508 செயல்படும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் 21 செயலிழந்த சங்கங்களும் ஆக மொத்தம் 529 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுள்ளது. 508 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 17,208 பால் ஊற்றும் உறுப்பினர்களும், 95012 பால் ஊற்றாத உறுப்பினர்களும் ஆக மொத்தம் 1,12,220 உறுப்பினர்களை உள்ளடக்கியது.

தற்போது நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் 53,300 கறவை மாடுகள் உள்ளன. நாமக்கல் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,58,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 63000 லிட்டர் பால் உள்ளூர் விற்பனை செய்யும் பொருட்டு 68,000 லிட்டர் பால் சேலம் ஒன்றியத்திற்கு பாலுக்கு பால் என்ற அடிப்படையில் அனுப்பப்படுகிறது . மீதமுள்ள பால் மெட்ரோ டைரிக்கு விற்பனைக்காகவும்,  பால் உபபொருட்களாக மாற்றம் செய்யவும் அனுப்பப்படுகிறது. நாமக்கல் ஒன்றியத்தில் தற்போது நாளொன்றுக்கு 1.40 இலட்சம் மதிப்புள்ள பால் பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் நுகர்வோர்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரமானது சராசரியாக கொழுப்பு சத்து 4.2 சதவீதம், கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள் 8.2 சதவீதமாக உள்ளது. மேலும் நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைவாக உள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலம் கீழ்கண்ட நலத்திட்டங்கள்      வழங்கப்பட்டு வருகிறது.

19.08.2019 முதல் அரசு அறிவித்தப்படி சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தி 28 யிலிருந்து 32 ஆகவும், எருமைபாலுக்கு 6 ரூபாய் உயர்த்தி 35 யிலிருந்து 41  ஆகவும் தரத்திற்கு ஏற்றாற்போல் நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்களுக்கு மாதமொன்றுக்கு 360  டன் கலப்புதீவனம் வழங்கப்பட்டு வருகிறது. 9 கால்நடை மருத்துவர்கள் மூலம் வாராந்தோறும் சங்கங்களுக்கு நேரடியாக சென்று இலவசமாக கால்நடைகளுக்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் கால்நடைகளுக்கு அவசர சிகிக்சை அளிக்கப்படுகிறது.

வாரந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களுக்கு இலவச மலடு நீக்க சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உறுப்பினர்களின் கட்டுத்தரைக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் 205 கிராம நல ஊழியர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50 % மானியத்தில் அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களில் DIPA யூனிட் மூலம் FPRP மற்றும் IBST திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 800 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால் ஊற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் KCC அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட வங்கி மூலம் கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பால் ஊற்றும் உறுப்பினர்கள் குறியீடு 16961 & பால் ஊற்றாத உறுப்பினர்கள் குறியீடு 12461 ஆகமொத்தம் 29422. இதில் 15459 உறுப்பினர்களுக்கு இதுவரை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தில் 60 புல் அறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு முழு மானியத்தில் 27 தானியங்கி பால் கொள்முதல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 9 யூனிட் கால்நடை மருத்துவ பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதமொன்றுக்கு சராசரியாக 4500 கறவைகளுக்கு வாராந்திர சிகிக்சையும், 180 கறவைகளுக்கு அவசர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் 205 செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மூலம் சராசரியாக மாதந்தோறும் 7500    கறவை மாடுகளுக்கு  செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள பால் உற்பத்தியில் ஆவின் மூலம் 60 சதவீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் விற்பனை பிரிவில் 50 சதவீதம் நுகர்வோர்களின்  தேவைகளை ஆவின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் ஒன்றியத்தில்  தற்போது தலா 50,000 கொள்திறனில் இரண்டு பால் குளிரூட்டும் நிலையங்கள் உள்ளன. தலா 5000 கொள்திறனில் 7 தொகுப்பு பால் குளிர்விப்பான்களும் , 2000 கொள்ளளவு கொண்ட 5 தொகுப்பு பால் குளிர்விப்பான்களும், 1000 கொள்ளளவு கொண்ட 3 தொகுப்பு பால் குளிர்விப்பான்களும், , 500 கொள்ளளவு கொண்ட 4 தொகுப்பு பால் குளிர்விப்பான்களும் ஆக மொத்தம் 53,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 16 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்கள் உள்ளது.

10 நாட்களுக்கு ஒரு முறை பால் சங்கங்களுக்கு நிலுவையின்றி பால் பணம் பட்டுவாடா   செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அலுவலர்களும் பால் உற்பத்தியாளர்கள்    நலச்சங்க பிரநிதிதிகள் இணைந்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2020- 21 ன் படி நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நிர்வாக அலுவலகக் கட்டிடம் , பால் குளிர்வு அறை மற்றும் திருங்செங்கோட்டில் பால் விற்பனை அலுவலக கட்டிடம் ரூ7 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அரசு ஆணை எதிர்நோக்கி வரைவு  சமர்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஒன்றியமானது 2020-21 - ம் தணிக்கை ஆண்டில் 196.92 கோடிக்கு உத்தேசமாக  வர்த்தகம் செய்யப்பட்டுட்டுள்ளது.